Sunday, February 8, 2015

ஈர்ப்பு விசை


ஈர்ப்பு விசை (Gravitational Force or Gravity) என்றால் என்ன?

நீங்க ஒரு மூணாங்கிளாஸ் படிக்கிற பசங்களா இருந்தா ஆப்பிள் மரத்துல இருந்து கீழ விழுகுதா.... கல்லை மேலே தூக்கிப் போட்டா அது கீழ விழுகுதா... அதான் க்ராவிட்டின்னு சமாளிச்சுட்டு.... அந்தப்பக்கம் திரும்பி... அவ்....னு வடிவேலு மாதிரி அழுதுகிட்டு போயிரலாம்.... ஆனா, நீங்கள்லாம் கண்ணுக்குள்ள இல்லை மூளைக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டிருவீங்க.... அதுனால... இப்ப பாருங்க...

க்ராவிட்டின்னா என்ன...? உண்மையச் சொல்லனும்னா... இன்னும் நமக்குத் தெளிவா தெரியாது. ஆனா, அது எப்டீ செயல்படுதுன்னு சிலபல ஐடியாக்கள் இருக்கு நம்மகிட்ட. எல்லோரையும் கேட்டா, டக்குனு... நியூட்டன் கண்டுபிடிச்சாரே அதானே...? அப்டீன்னு கேப்பாங்க.. என்னோமோ காணாம போன நாய்க்குட்டியைக் கண்டு பிடிச்ச மாதிரி....

ஆப்பிள் அவரு தலையில விழுந்தவுடனேயே அவரு க்ராவிட்டிதான்னு உலகத்துக்கு அறிவிச்சுறலை. நிறைய கஷ்டப்பட்டுருப்பாரு, நிறைய ஹோம்ஒர்க் செஞ்சுருப்பாரு, நிறைய கணக்குகள் போட்டுப் பார்த்துருப்பாரு. அப்டீலாம் கஷ்டப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து, அதை எல்லாரும் ஏத்துக்குற மாதிரி கணிதச் சமன்பாடுகளா முன் வைச்சாரு. அறிவியல் உலகமும் அதை ஏத்துக்கிச்சு. அப்டீ என்ன சொன்னாரு...?

நிறையுள்ள இரண்டு பொருள்களுக்கு இடையே ஏற்படும் விசையே ஈர்ப்பு என்கிறார். அந்த விசையும், இரு பொருள்களுக்கு இடையே இருக்கும் தொலைவைப் பொறுத்து வலுவானதாகவோ அல்லது வலுக்குன்றியதாகவோ இருக்கும் என்கிறார்.

அறிவியல் கோட்பாடாகச் சொல்வதென்றால்,

ஈர்ப்பு விசையானது, திணிவுகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

F = G.((m1.m2)/r^2)

G என்பது ஈர்ப்பியல் மாறிலி. m1 மற்றும் m2 இரு பொருள்களின் நிறை, r என்பது அப்பொருள்களுக்கு இடையே உள்ள தொலைவு.

இதன் அடிப்படையிலதான் இந்த பிரபஞ்சத்துல எல்லாமே ஒன்றை ஒன்று சுத்தி வருதுன்னு சொல்றாங்க. புரியுற மாதிரி சொல்றதா இருந்தா... ஒரு கயித்துல கல்லைக்கட்டி சுத்தும்போது... நம்ம கைக்கும் அந்தக் கல்லுக்கும் இடையே இருக்குற கயிறுதான் ஈர்ப்புவிசை.

நாம பூமியில இருக்கோம். நமக்கும் நிறை இருக்கு, பூமிக்கும் நிறை இருக்கு. பூமியும் நம்மளை ஈர்க்கும், நாமளும் பூமியை ஈர்ப்போம். ஆனா, பூமி நம்மைவிட ரொம்பப் பெருசுங்குறதுனால அதோட ஈர்ப்புதான் அதிகமா இருக்கும், அதுனால நாமதான் அது மேல போய் விழுந்து கிடப்போம்.

விண்வெளியில் வேறு எந்த விசையும் செயல்படாத ஓரிடத்தில் இரண்டு புத்தகங்களை சற்று அருகருகே வைத்தால், அவற்றின் நிறை காரணமாக ஈர்ப்பு விசை ஏற்பட்டு ஒரு சமயத்தில் அவைகள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து விடும்.

இதன் அடிப்படையில்தான் யுரேனஸ் தன் சுற்றுப்பாதையில் சற்று ஆட்டம் காணுறதை வச்சு நெப்ட்யூன்னு ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சாங்க.

சரி, இதுவரைக்கும் நாம பாத்தது நியூட்டனோட ஈர்ப்பு விசை. அடுத்து நம்ம ஐன்ஸ்டைன் வர்றாரு... அவரு சொல்றாரு... ஈர்ப்பு விசைன்னு சொல்றது ஓகே... ஆனா, அந்த விசைதான் நேரடியா பூமியையும் மத்த கிரகங்களையும் இழுத்துப் பிடிச்சுக்கிட்டு சுத்த வைக்குதுன்னு சொல்றது அபத்தம்.

சூரியன் மாதிரி நிறையுள்ள ஒரு பொருள் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சுருது... அந்த வளைவுக்குள்ள மாட்டிக்கிட்ட கிரகங்கள் வேற வழியில்லாம அதுக்குள்ள வழுக்கி விழுந்துக்கிட்டு இருக்குதுங்கன்னு சொல்றாரு. ஆடிப்போயிட்டாங்க எல்லாரும்.

ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. மழை பெய்ஞ்சு முடிச்சதும் மண்ரோட்டுல ஒரு மாட்டுவண்டி போகுதுன்னு வைங்க. என்னாகும்? ஒரு தடம் உருவாகும் அல்லவா? அது பிற்பாடு காய்ஞ்சு கெட்டிப்பட்டு இறுகுனதுக்கு அப்புறம் ஒருத்தரு அந்தப்பக்கமா சைக்கிள்ல வர்றாருன்னும் வச்சுப்போம். அந்த மண் பாதையில உருள்ற சக்கரம் ஒரு சமயத்துல அந்த மாட்டு வண்டி போன தடத்துக்குள்ள வந்து சிக்குனா... அதுவரைக்கும் அந்த சைக்கிள் வந்த வேகத்துக்கு... இனி அந்த மாட்டுவண்டி போன தடத்துலேயேதான் போகும். (சைக்கிள்காரரு தடுமாறுவாரு அது வேற கதை...)

அது மாதிரி, இந்த சூரியன் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சு வச்சுருக்கு அதுக்குள்ள சிக்குன நம்ம பூமிக்கு வேற வழியைத் தேர்ந்தெடுக்க வக்கில்லாம, அந்த வளைவுக்குள்ளேயே சுத்தி வருது. அறிவியல் உலகம் ஸ்தம்பித்துப் போனது. ஒருவரும் பேசவில்லை. ஆனால், இது எப்படிச் சாத்தியம்...? வெளியையாவது வளைப்பதாவது... ஐன்ஸ்டைனுக்கு நிச்சயம் கிறுக்குதான் பிடித்துப்போனது என்று மனதிற்குள் நினைத்திருப்பார்கள்.

ஆனால், வெளி வளைகின்றது, அதனூடே செல்லும் ஒளியும் நேர்பாதையில் செல்லாது வளைந்தே (Gravitational Lensing) செல்லும்னு ஆர்தர் எடிங்டன்ங்குறவரு 1919ல அதை நிரூபிக்கிறாரு. இந்த இணைப்பைப் பாருங்க.

http://ircamera.as.arizona.edu/NatSci102/NatSci102/text/lightbend.htm

ஐன்ஸ்டைன் ஈர்ப்பை வெறும் விசையாகப் பார்க்கவில்லை. அது வெளியை மட்டுமல்ல நான்காவது பரிமாணமான காலத்தையும் சுருக்குகின்றது என்கிறார். அட, என்னடா இது வம்பாப் போச்சு... வெளியை வளைக்குதுன்னாரு... நம்பமுடியலை... சரி அதுக்கப்புறம் கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிய வச்சாச்சு. வெளி வளையுது அதுனால ஒளி வளையுதுன்னு. இப்ப என்னடான்னா... காலத்தையும் வளைக்குதுங்குறாரே... கன்ஃபர்மா இவரு லூசுதான்னு சொல்லிருப்பாங்க.

நியூட்டனைத் பொறுத்தவரையில் காலம் தனித்த ஒன்று. ஐன்ஸ்டைனைப் பொறுத்தவரை காலம் சார்புடையது. எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஈர்ப்பு விசை கூடக் கூட காலம் சுருங்கி விடும். ஒரு கட்டத்தில் காலம் ஸ்தம்பித்துப்போய்விடும். காலமில்லாக் காலமாகிப்போய்விடும் என்கிறார்.

சரி ஈர்ப்பு விசை நிறையின் காரணமாக ஏற்படுகின்றது என்று தெரிகின்றது. அது வெளியையும் வளைக்கின்றது ஒளியையும் வளைக்கின்றது, ஏன், காலத்தையும்கூட வளைக்கின்றது என்று தெரிகின்றது. ஆனால், அந்த விசை கடத்தப்படுவதற்கு எது மூலமாக இருக்கின்றது...?

அடிப்படையான நான்கு விசைகளில் வேறு எந்த விசைகளும் இப்படி ஒரு பரந்தளவில் செயல்படுவதில்லை. அப்படி பரவலாக இந்த விசை செயல்படுவதற்கு ஏதேனும் ஊடகம் இருக்கக்கூடுமோ என்று தேடப்படுகின்றது. அதற்கு க்ராவிட்டான் என்று பெயரும் கூட வைத்து விட்டார்கள். பிள்ளை பெறுமுன் பெயர் வைப்பது போல.

இந்தக் க்ராவிட்டானை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும், Unified Field Theory-UFT ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்கிறார்கள். அதாவது, இன்றைக்கு இருக்கும் நான்கு அடிப்படையான விசைகள் எல்லாம் ஒரு காலத்தில் அதாவது பெருவெடிப்பிற்கு முந்தைய காலத்தில் ஒரே புள்ளிக்குள் எப்படி அடங்கிக்கிடந்தன என்று தெரிந்துகொண்டுவிடலாம்.

அடிப்படையான நான்கு விசைகளைக் குறித்து இங்கே பாருங்கள்...https://www.facebook.com/photo.php?fbid=595404967160845&set=a.551456458222363.1073741825.100000740415193&type=3&permPage=1

படம் எடுக்கப்பட்ட தளம் : https://einstein.stanford.edu/MISSION/mission1.html







No comments:

Post a Comment