Monday, January 19, 2015

தேன் என்பது என்ன?



தேன்

தாவரங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்றால், ஒரு மலரில் உள்ள மகரந்தம் (Pollen) இன்னொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதாவது மகரந்தச் சேர்க்கை (Pollination) நடைபெறவேண்டும். இது இரண்டு விதமாக நடைபெறும். ஒன்று தன்மகரந்தச் சேர்க்கை (Self-Pollination) மற்றொன்று அயல்மகரந்தச் சேர்க்கை (Cross-Pollination).

எந்த மாதிரியாக இருந்தாலும், மகரந்தச் சேர்க்கை இரண்டு ஊடகங்கள் மூலம் நிகழ்கின்றது. ஒன்று உயிருள்ள ஊடகம் (Biotic), உயிரற்ற ஊடகம் (Abiotic). உயிரற்ற ஊடகம் என்பது மகரந்தத் தூள்கள் காற்றின் மூலமாகவோ அல்லது நீர் மூலமாகவோ மகரந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். உயிருள்ள ஊடகம் என்பது, உயிரினம் ஏதேனும் ஒன்றின் மூலமாக மகரந்தத் தூள்கள் பரிமாறிக்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, பட்டாம்பூச்சிகள், வண்டுகள், தேனீக்கள், ஈக்கள், சிறுபறவைகள் போன்றவைகள் மூலம்.

அது எப்படி சாத்தியம்...? அதற்குத்தான் இயற்கை ஒரு அருமையான ஏற்பாடு செய்திருக்கின்றது. பூக்களின் உள்ளே இருக்கும் ஒருவிதமான இனிப்பான திரவம், நாம் மது என்று சொல்வோமே, தேன் என்று சொல்வோமே, அதுதான். அதனைப் பருகுவதற்கா வந்து அமரும் உயிரினங்களின் கால்களில் உள்ள சிறுமயிர்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தத்தூளானது, அந்த உயிரினம் மற்றொரு மலரில் போய் அமரும்பொழுது அங்கு பரிமாறிக்கொள்ளப்படும். இனப்பெருக்கத்திற்கான வேலையும் துவங்கப்படும்.

இப்படி உயிரினங்களைக் கவர்வதற்காகவே, மலர்கள் வண்ணமயமாகவும், அதி நறுமணத்துடனும் இருக்கும். இயற்கையின் ஏற்பாடுதான் என்னே..!

சரி, தேன் என்பது என்ன?

தேன் என்பது மலரில் உள்ள மதுதானா? இல்லை. ஆனால், அதுதான் தேனிற்கான மூலம். மலரில் சேகரித்த மதுவானது பெரும்பாலும் நீரையும் சுக்ரோஸ் எனப்படும் ஈரலகுச்சர்க்கரை(disaccharide)யையும் கொண்டிருக்கும். அதனைப் பருகும் தேனீக்கள், அதனைக்கொண்டு போய் தேன்கூட்டில் உள்ள தேனீக்களிடம் (House Bees) எதிர்க்கழித்துத் (regurgitate) தந்துவிடும்.

அவைகள் தாங்கள் சுரக்கும் Invertase என்ற நொதிப்பான் (Enzyme) மூலமாக அந்த சுக்ரோஸை உடைத்து Hexose எனப்படும் இரண்டு எளிய ஓரலகுச் சர்க்கரைகளாக (monosaccharides) மாற்றி விடும். அவையாவன, குளுக்கோஸ் (Glucose) மற்றும் ஃப்ரக்டோஸ் (Fructose).#

இதில் குளுக்கோஸை குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் (Glucose Oxidase) என்ற நொதிப்பானானது மேலும் உடைத்து, குளுக்கானிக் அமிலம் (Gluconic Acid) மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடாக (Hydrogen Peroxide) மாற்றும். இந்த குளுக்கானிக் அமிலமானது தேனை சிறிய அளவிலான (மிகக்குறைந்த அளவில் pH மதிப்புக் குறைந்து) அமிலத்தன்மையைக் கொடுக்கும். இந்த அமிலத்தன்மை, நுண்ணுயிரிகள் என்று சொல்லப்படும், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்றவை தாக்காமல் பாதுகாக்கும். அதே சமயம், ஹைட்ரஜன் பெராக்ஸைடானது அதே நுண்ணுயிரிகளிடம் இருந்து இந்தத் தேனை தன் முட்டைப்புழுக்களுக்குத் (Larvae) தரும் முன் ஒரு குறைந்தகால பாதுகாப்பைத் தரும்.

அதிலிருக்கும் பெரும்பாலான நீர்ச்சத்து நீக்கப்பட்டு, வெறும் 18 சதவீதம் மட்டுமே அதில் நீர் இருக்கும். பின் இந்தத் தேனானது தேனடையில் அறைகளில் சேகரித்து வைக்கப்படும்.

இப்படி ஏறத்தாழ ஒரு கிலோ தேனைச் சேகரிக்க தேனீக்களானது, பல்லாயிரக்கணக்கான மலர்களுக்கும் செல்ல கிட்டத்தட்ட 90 ஆயிரம் மைல்கள் பறந்து செல்கின்றனவாம். இது பூமியை மூன்று முறை சற்றிவருவதற்குச் சமம்.


#குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ்களை நம் உடல் எளிதில் கிரகித்துக்கொள்ளும். செரிமானத்தின் போதும் நம் உணவுகள் இப்படித்தான் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸுகளாக மாற்றப்பட்டு கிரகித்துக்கொள்ளப்படுகின்றன. அதனால்தான், உடனடி சக்தி வேண்டுமெனில் குளுக்கோஸ் நேரடியாகவே இரத்தத்தில் செலுத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment