Monday, January 19, 2015

இரத்தம் என்ன நிறம்?



எந்த உயிரினத்துக்கு இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்? இரத்தமே இல்லாத உயிரினம் எது?


பொதுவாக பூமியில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் ஆக்ஸிஜனை அடிப்படையாகக் கொண்டவை. ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செல்ல இரத்தத்தைப் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் கரப்பான் பூச்சி மட்டும் tracheae எனப்படும் குழாய் போன்றதொரு அமைப்பினைப் பயன்படுத்துவதால், அதன் இரத்தம் நிறமற்றது.

முட்டையிடப்போகும் பெண் கரப்பான் பூச்சியின் இரத்தம் மட்டும் சற்றே வெளிறிய ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். முட்டைக்குத் தேவையான vitellogenin எனப்படும் மரபணுப்புரதத்தை கல்லீரலில் உற்பத்தி செய்து அதனை கருப்பைக்கு இரத்தத்தின் மூலம் அனுப்புவதால் அந்நிறம்.

பெரும்பாலும், பெரிய உடல்கொண்ட உயிரினங்கள் இரத்தம் கொண்டிருக்கும். கடற்பஞ்சு (இரு ஒரு விலங்கினம் தெரியுமா?), ஜெல்லி மீன், வட்டப்புழுக்கள் போன்றவைகளுக்கு இரத்தம் கிடையாது. அவைகள் ஆக்ஸிஜனை உடலின் மேற்பகுதிகள் மூலம் உறிஞ்சிக்கொள்ளும்.


ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு போனால்... ரத்தம் ஏன் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும்...? யாருக்கேனும் இந்தக் கேள்வி தோன்றியதா...?


ஆங்கிலத்தில் Red Blood Corpuscles (RBC) என்றழைக்கப்படும் சிவப்பணுக்கள் ஏறக்குறைய 35டிரில்லியன் எண்ணிக்கையில் ஒரு மனிதனின் உடலில் வலம் வந்துகொண்டிருக்கின்றது. சிவப்பணுக்களில் Hemoglobin என்றொரு நிறமி உள்ளது. இது இரும்பு மற்றும் புரதச்சத்துக்களைக் கொண்டது. இதுவே இரத்தத்திற்கு சிவப்பு வண்ணத்தைக் கொடுக்கின்றது.

இந்த ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜனைத் தூக்கிச்செல்வதற்காக ஒரு மூட்டைதூக்கி இருக்கின்றது. இரத்தமானது நுரையீரலுக்குள் சென்று வரும்பொழுது ஆக்ஸிஜனைச் சுமந்துகொண்டு தமனிகள் (Arteries) மூலம் ராஜபாட்டையில் பயணிப்பது போன்று சென்று, சிறுதந்துகிக்குழாய் (Capillaries) மூலம் ஊருக்குள் பிரிந்து செல்லும் பாதைகளில் செல்வது போல் உடலின் பாகங்களுக்கு அளிக்கப்படுகின்றது.

பின்னர், ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு (எரிக்கப்பட்டு... தீயால் எரிக்கப்பட்டு அல்ல) கார்பன் டை ஆக்சைடையும் (ஹீமோகுளோபினில் உள்ள) அதே மூட்டைதூக்கி சுமந்துகொண்டு சிரைகள் வழியாக நுரையீரலுக்கு வந்து, "இந்தாப்பா வெளியே dispatch பண்ணிடுங்க"ன்னு தூக்கிப் போட்டுட்டுப் போயிடும்.

இப்ப ஓகேவா...? ஆக்ஸிஜனை எடுத்துட்டுப் போற அந்த மூட்டைதூக்கி இருக்குறது...ஹீமோகுளோபினுங்குற ஒரு நிறமியில. அந்த நிறமிதான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்குது.



மேலதிகத் தகவல்:

சிவப்பணுக்கள் ஏறக்குறைய 4 மாதங்களே உயிரோடு இருக்கும்... பின்னர் அழிந்துவிடும். அவ்விழப்பை புதிய சிவப்பணுக்கள் ஈடுகட்டிவிடும்...

No comments:

Post a Comment